December 13, 2017

காபன் கால்தடமும் (Carbon Foot Print) அதனை சமப்படுத்துவதில்

மர நடுகையின் தேவைப்பாடும்
 
பூகோள வெப்பமாதல் என்பது இன்று உலக நாடுகள் அனைத்தும் எதிர் நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சனையாகும்.இயற்கைக்கு மாறாக மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே இப் பிரச்சனைக்கு மூல காரணமாகின்றது. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளின் கைத்தொழில்மயமாக்கல் செயற்பாட்டின் விளைவே இதற்கு அடிப்படையாகின்றது. 

மனிதனால் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய செயற்பாடுகள் அதாவது வாகனப் பாவனை மூலம் வெளியேறும் காபன் புகை, கழிவுப் பொருட்கள் எரித்தல், விவசாய நடவடிக்கைக்காக விசிறும் இரசாயனப் பொருட்கள், குளிரூட்டிப் பாவனை, காடுகள் அழிக்கப்படல், நீர்நிலை, குளங்கள் நிரப்பப்படுதல் போன்றன வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்களாக பதிக்கப்படுகின்றன. இச் செயற்பாட்டில் காபனீரொட்சைட் (CO2) முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தான் இதனை முகாமைத்துவம் செய்யும் அடிப்படையில் உலக நாடுகள் பல ஒன்றினைந்து காபன் கால்தடம் (Carbon Foot Print) எனும் எண்ணக்கருவை உருவாக்கியுள்ளனர். இதனை பல நாடுகள் ஏற்றுக்கொண்டாலும் உலக கைத்தொழில் வளர்ச்சியடைந்த சில வல்லரசு நாடுகள் இதனை உதாசீனம் செய்யும் நிலையும் காணப்படுகின்றது.


மனிதனுடைய இயற்கைக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் காபன் மற்றும் அதனோடு இணைந்த மூலக் கூறுகள் தொடாபுபட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் காபன் கால்தடம் எனும் எண்ணக்கரு தோற்றம் பெற மனித செயற்பாடுகளே அடிப்படையாகின்றது. காபன் கால்தடம் எனும் போது மனிதனுடைய நாளாந்த வீட்டுப்பாவனை மற்றும் வியாபார நடவடிக்கை மூலமாக வெளியேற்றப்படும் காபனீரொட்சைட்டு வாயுவின் அளவை குறிப்பதாக அமைகின்றது. மனித செயற்பாடுகள் மூலமான ஏனைய பச்சைவீட்டு வாயுக்களான மெதேன் ;(CH4)> கந்தவீரொட்சைட்டு (SO2)> நைதரசனீரொட்சைட்டு (NO2)> நீராவி(H2O), ஓசோன்(ழு3) போன்றன வெளிப்படுகின்ற போதிலும் இவற்றினது பங்களிப்பானது காபனீரொட்சைட்டு வாயுவின் வினைத்திறன் சார்பாக ஒப்பீடு செய்வதனுடாக காபன் கால்தடம் எனும் விடயப்பரப்பினுள் உள்ளடக்கப்படுகின்றன. புவி வெப்பமடைவதில் மேற்குறிப்பிட்ட வாயுக்களின் செல்வாக்கு இன்றியமையாதது. மேலும் இயற்கை அனர்த்தங்கள் இன்றளவில் மிக கூடியளவு இடம்பெறுவதற்கும் புவி வெப்பமடைவதற்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுகின்றது.

புவி மண்டலத்தில் சேருகின்ற பச்சைவீட்டு வாயுக்களின் செறிவு காரணமாக சூரியனிலிருந்து பூமிக்கு வந்தடையம் சூரிய வெப்ப கதிர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல முடியா நிலை காணப்படுவதோடு பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுகின்றது. இந் நிலை பூமியின் பிறழ்வான தோற்றப்பாடுகளையும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படவும் ஏதுவாகின்றது. இந் நிலையானது மனிதனுடைய சீரான வாழ்க்கை முறையையும் பாதிக்கின்றது. எனவே தான் மனிதனுடைய செயற்பாடுகளானது எதிர்கால சந்ததியின் நன்மை கருதியும் நிலைபேறான அபிவிருத்தியை அடையக்கூடிய வகையிலும் சூழலின் தாக்கங்களை கவனத்தில் கொண்டும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
காபன் கால்தடம் தொடர்பான செயற்பாட்டின் கழிவு முகாமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொதுவாக கழிவுகள் எனும்போதும் பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமற்ற நேரத்தில் காணப்படும் வளங்களாகும். எனவே கழிவுகளை குறைத்தல் (Reduce), மீள் பயன்படுத்தல் (Re-Use), மீள் சூழற்சி (Re-Cycle) செய்தல் போன்ற 3R என்ற செயற்பாட்டின் மூலம் முகாமைத்துவம் செய்வதனுடாக காபன் கால்தடத்தின் அளவினை குறைத்துக் கொள்ளலாம். 

காபன் கால்தடத்தின் அளவை குறைக்கின்ற செயற்பாட்டினை மரங்கள் நடுவதன் மூலம் பெற முடிகின்றது. மரங்களானவை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு வாயுவினை ஏனைய உயிரினங்களுக்கான உணவாக மாற்றுவது மட்டுமல்லாமல் பக்கவிளைவாகும் ஒட்சிசன் வாயுவினை(O2) உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத பிரதான ஒரு வளமாக வழங்குகின்றது. மர நடுகையானது எமது எதிர்கால சந்ததியினரை புவி வெப்பமடைதல் மூலமாக ஏற்படும் பிறழ்வான தன்மையிலிருந்து காக்க உதவ வழி சமைக்கும்.

பொதுவாக சமப்படுத்தல் (Balance) எனும் செயற்பாட்டில் மரநடுகை என்பது இன்றியமையாததாகும். உதாரணமாக ஒரு ஹெக்டயர்(Ha) தாவரங்களானது 3 மெற்றிக்தொன் காபனீரொட்சைட்டை உறிஞ்சி 2 மெற்றிக்தொன் ஒட்சிசன் வாயுவை வெளிவிடுகின்றன. அதுமட்டுமன்றி நன்கு வளர்ந்த மரம் அவியுயீர்ப்பு மூலம் ஒரு நாளைக்கு ஒரு கலன் நீரை வளிமண்டலத்திற்கு செலுத்துகின்றது.பொதுவாக கிராமபுற சூழலை விட நகர்புற சூழல் வெப்பநிலை 0.5oc 1.5 oc வரை உயர்வாகவே இருக்கும். எனவே மரநடுகை என்பது நகர்புற சூழலிலேயே அதிக அக்கறையுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். காடுகளாக காணப்பட்ட பிரதேசங்களே இன்று கிராமங்களாகவும் நகரங்களாகவும் காணப்படுகின்றன. எனவே வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரங்களை மீள் நடுகை செய்ய வேண்டும். மேலும் மர நடுகையின் போது நிழல் மரங்கள், அலங்கார மரங்கள் மட்டுமன்றி பயன்தரு மரங்களையும் நட வேண்டும். 

குறிப்பாக, மரநடுகை எனும் போது நடுகை மற்றும் பராமரிப்பு என்பவற்றுடன் தொடர்புபட்டது.பொதுவாக கூடுதல் நிழல் தரக்கூடியதும்,பூக்கள் கிளைகள் கொண்டவையாகவும் முட்களற்றவையாகவும் காணப்படவேண்டும். மேலும் பாதையோரங்களில் நடப்படும் போது ஆக்கிரமிப்பு மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டும். வேம்பு, இலுப்பை, கொன்றை, பூவரசு, நாவல், சவுக்கு, போன்ற மரங்களை நடுவது சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட ஒட்டு மொத்த செயற்பாடுகளானவை காபன் கால்தடம் தொடர்பான எண்ணக்கருவில் ஏற்படுத்தும் விளைவுகளை உற்று நோக்க முடிகிறது.     

0 comments:

Post a Comment